தோழர் பி.சுந்தரய்யா நினைவு நாள்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவரும், மகத்தான தெலுங்கானா ஆயுத புரட்சிக்கு தலைமை தாங்கியவரும் திறமையான கட்சி அமைப்பாளருமான கே.சுந்தரய்யா 1913ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று பிறந்தார். அவருடைய இயற்பெயர் புச்சலபள்ளி சுந்தர ராமரெட்டி.
சுந்தரய்யா பள்ளியில் படிக்கும் பொழுது தன்னைப் போன்ற சிந்தனை கொண்டிருந்த சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் நாட்டு நடப்பு குறித்து விவாதித்து தங்களுக்கிடையே ஒரு புரட்சிகர குழுவை உருவாக்கினார். பல்வேறு புரட்சிகர குழுக்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிப்பது இந்த குழுவின் பிரதான நோக்கமாகும். சந்திரசேகர் ஆசாத் சம்பந்தப்பட்ட ‘காகோரி கொள்ளை வழக்கு’ நூலை அவர்கள் படித்தனர்.
விடுமுறை நாட்களில் அவர் கிராமத்திற்கு செல்லும் பொழுதெல்லாம் தலித் மக்கள் குறித்து அவருடைய தாயாரும் அண்ணனும் கொண்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களுடன் அவர் சண்டை போடுவார். தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை அவர் கடுமையாக எதிர்ப்பார். தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோருவார். அவர்களுடைய வீடுகளுக்கு போவார். அவர்களுடன் சேர்ந்து இருப்பார். அவர்களுடைய உணவை பகிர்ந்து உண்பார். வயலில் அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்வார். இதை அவர் கிராமத்தில் இருந்த சாதி இந்துக்கள் விரும்பவில்லை. ஆனால் சுந்தரய்யாவோ அந்த எதிர்ப்பை தூசாக கருதி நிராகரித்தார்.
சுந்தரய்யா கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்தவர் அமீர் ஹைதர் கான். சுந்தரய்யாவின் திறமைகள் மற்றும் தேர்ச்சி குறித்து நம்பிக்கை கொண்டு இருந்த ஹைதர் கான் பெங்களூருக்கு சென்று சுந்தரய்யாவைச் சந்தித்தார். சுந்தரய்யா அவரை கப்பன் பூங்காவிற்கு அழைத்துச் கென்று விவாதித்தார். நாட்டு நிலைமை தேசிய இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்து ஹைதர் அலி எடுத்துரைத்தார்.
1934 ஆம் ஆண்டில் அமீர் ஹைதர் கான் சிறையிலிருந்து வெளிவந்தார். இச்செய்தி சுந்தரய்யாவுக்கு கிடைத்ததும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே சென்னைக்கு சென்று தோழர் ஹைதர் கானை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் கட்சியை ஒன்றுபடுத்த முயற்சிகள் குறித்தும் இதர ஆவணங்கள் குறித்தும் சுந்தரய்யா கேட்டறிந்தார்.
சுந்தரய்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த உடன் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொறுப்பு சுந்தரய்யாவுக்கு தரப்பட்டது. தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை உருவாக்கும் பொருட்டு சென்னையை தனது செயல்பாட்டு மையமாக வைத்துக் கொண்டார். தென்னிந்தியாவில் கட்சிக் கிளைகளை உருவாக்கும் முயற்சியில் சுந்தரய்யா ஆந்திராவில் முதல் கட்சிக் கிளையை உருவாக்கினார். இப்படியாக தமது கட்சிப் பணியை துவக்கிய தோழர் சுந்தரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக, தெலுங்கானா எழுச்சியின் நாயகனாக, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவராக உயர்ந்தார். என்றென்றும் அவரது புகழை உயர்த்திப் பிடிப்போம்.
மூ.அன்பரசன், வாலிபர் சங்க பொள்ளாச்சி தாலுகா செயலாளர்